வில்லிசை - ஓர்
அறிமுகம்
பழந் தமிழரின்
தொன்மையான கலைகளுள் ஒன்று வில்லுப்பாட்டு வில்லைப் பிரதான இசைக் கருவியாகவும், உடுக்கை, குடம், தாளம், கட்டை போன்றவற்றைத் துணைக்
கருவிகளாகவும் கொண்டு இசைக்கப்படுவது.
பொதுவாகப் புராண
இதிகாசக் கதைகளும் கட்டபொம்மன் கதை,காந்தி மகான் கதை, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.கதை,பாரதி கதை, கலைவாணர் கதை போன்ற சமகால வரலாற்று மாந்தர் பற்றிய
கதைகளும் வில்லுப் பாட்டாகப் பாடப் படுவதுண்டு. ஈழத்தில் 'மஹாகவி'யின் 'கண்மணியாள் காதை' யை நடிகவேள் லடிஸ் வீரமணி பாடிப் பிரபல்யப் படுத்தினார்.
தமிழ்த் தினப் போட்டிகளில் வில்லிசையும் ஒரு போட்டி நிகழ்ச்சியாக
இடம்பெறுவதால் பாடசாலை மட்டங்களில் அக்கலை பற்றிய அறிவும் நயப்பும் இருந்தது
வருவது வரவேற்கப்பட வேண்டியது.
தமிழகத்தில் நவீன
வில்லிசையின் பிதாமகர்களாக பிச்சைகுட்டிப் புலவரும் தோவாளை சுந்தரம்பிள்ளையும்
அறியப்படுகிறார்கள். கலைவாணர் N.S .கிருஷ்ணனையும் அவரது சீடர்களான
குலதெய்வம் ராஜகோபால், கலைமாமணி சுப்பு ஆறுமுகம் ஆகியோரைத் தொடர்ந்து
மற்றும் சிலரும் ஈழத்தில் யாழ்ப்பாணம் சின்னமணி, லடிஸ் வீரமணி,உடப்பு பெரி சோமஸ்கந்தர், நாச்சிமார் கோயிலடி ராஜன், உடுப்பிட்டியூர் யோகன் உட்பட வேறு சிலரும்
வில்லிசைக் கலை விற்பன்னர்களாக விளங்குகிறனர்.
தெம்மாங்கு
முதலான நாட்டுப்புறப் பாடல் மெட்டுக்களும் கூத்துப் பாடல் மெட்டுக்களும் வில்லிசையிற்
கையாளப்படுவது வழக்கம். கதையின் சுவாரஸ்யத்துக்காக உரையாடல்களிலும் பாடல்களிலும்
ஊடுபாவாக நகைச்சுவை விரவி வரும். பல்வேறுபட்ட பாத்திரங்களின் இயல்புகளை முகபாவனை
மாற்றங்களுடன் நாடகப் பாங்கில் நகைச்சுவை இழையோட வெளிப்படுத்தத் தெரிந்தவராக கதை சொல்பவர் இருந்தால்தான் அந்நிகழ்ச்சி பரிமளிக்கும்.இயல் இசை நாடகம் எனும் முத்தமிழ்க் கலைகளிலும் தேர்ந்தவராக அவர் இருக்க வேண்டும்.
திருக்குறளை முதன் முதலாக இலத்தீன்
மொழியில் மொழிபெயர்த்தவரும் தேம்பாவணியையும் தொன்னூலையும் தந்து தமிழிலக்கியத்தை வளப் படுத்தியவருமான
பெஸ்கி எனும் இயற்பெயர் கொண்ட இத்தாலிய வீரமாமுனிவர் 'பரமார்த்தகுரு' எனும் ஒரு நகைச்சுவைக் கதையைத் தமிழில் எழுதி, Satire எனப்படும் நையாண்டி எழுத்துக்கு கால்கோளிட்டார். ஆனாலும்
அவர் எழுதி சுமார் இரு நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே கல்கி, தேவன் போன்றோர் அத்தகைய கதைகளைத் தமிழில் எழுதத்
துணிந்தனர்.
வீரமாமுனிவரின் கதையில்
- குருவும் சீடர்களும் ஆற்றைக் கடந்த- ஓர் அங்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு நகைச்சுவை (?) வில்லுப்பாட்டை யாம் ஆக்கியுள்ளோம். சமய, சீர்திருத்த நோக்கங்கள் எதுவுமின்றி, வெறும் பொழுது போக்குக்காக, மட்டுமே இது எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகச்
சிறுவர்களை ஈர்க்கக் கூடிய கூறுகளைக் கொண்டுள்ளதால் இக்கதையைத் தெரிவு செய்தேன் .வில்லுப்பாட்டின் அமைப்புக்கள் எனக் கூறப்படும் எழுவகை அம்சங்களுள் (குருவழி பாடுதலும் நாட்டு வளமும் தவிர்த்து) காப்பு விருத்தம், அவையடக்கம், வருபொருள் உரைத்தல், கதைக்கூறு, வாழி பாடுதல் எனும் ஐந்தை மட்டும் தெரிந்து மெட்டுகளுக்கிசைவாகப் பாடல்களை யாத்துள்ளேன்.
வில்லுப்பாட்டுக்கான முறையான பிரதிகள் நூலுருவில் கிடைக்கப் பெறாத
காரணத்தால் சுருளிராஜனின் 'ஹிட்லர் உமாநாத்' பட வில்லுப் பாட்டைத்தான் புலம்பெயர் நாட்டுத் தமிழ்ச்
சங்கத்தினர் பலரும் தஞ்சமடைவதாகத் தெரிகிறது. (நாடகம் என்றால் 'திருவிளையாடல்'.) அதனால் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற உயரிய நோக்குடன் நானெழுதிய பிரதியை இங்கு தந்துள்ளேன்.
எமது
மேடையேற்றங்களில் பொதுவாக எழுத்தாளனைப் புறக்கணித்து விடுவர் அல்லது
இருட்டடிப்புச் செய்து விடுவர். சிலர், யாரோ பெற்றதைத் தமதென்று கூறிப் போலிப் பெருமிதங் கொள்வர். உண்மை தெரியவரும் போது
சிறுமைப்பட நேருமேயென சிறிதும் எண்ணார்.
சரி அவர்களை விடுங்கள்.
UK- Northampton தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்கள்+மாணவர்கள்
ஒத்துழைப்பால் இது 05.03.2016இல் வெற்றிகரமாக முதன்முதலாக மேடையேற்றப்பட்டது
.சுமார் 45நிமிட நேரம் அவையினர் பெருந் தன்மையுடன் தமது செவிகளை ஈந்தனர்.
அவர்களுக்கு நன்றி. உங்களில் யாருக்காவது இது பிடித்துப்போய்,வேறு வழியின்றி
மேடையேற்ற விரும்பினால் No objection . மற்றப்படி ஒருவரி எமக்கும்
அறியத்தந்தால் நல்லது. நாங்களும் கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்வமே. இல்லாட்டாலும்
குறையொன்றும் இல்லை.
க.சொல்; தந்தனத்தோம்
என்று சொல்லியே வில்லினில் பாட
எல்; ஆமா
க.சொ. வில்லினில் பாட
எல்; ஆமா;
க.சொ.; வரம் தந்தருள்வாய் .சரஸ்வதியே கலைமகளே
எல்; கலைமகளே
க.சொ.- வந்துள்ள சபையோரே எல், - வணக்கம் வணக்கம்
க,சொ.-
அன்னையரே தந்தையரே எல்.
- வணக்கம் வணக்கம்
க.சொ. - அண்ணமாரே அக்காமாரே எல். -
வணக்கம் வணக்கம்
க.சொ. - தம்பியரே தங்கையரே எல். - வணக்கம் வணக்கம்
க.சொ. - தாத்தாவோட பாட்டிமார்க்கும்
எல். - வணக்கம் வணக்கம்
க.சொ. - அன்பர்களே நண்பர்களே எல்' - வணக்கம் வணக்கம்
க.சொ.- எல்லாருக்கும் வணக்கம்.
இண்டைக்கு நாங்கள் -
எங்கிட கன்னிப்
படைப்பா -ஒரு வில்லுப்பாட்டை
உங்களுக்கு முன்னால
-அரங்கேற்றப் போறம்.
இதில நாங்கள் விடிற -
சொற் பிழை பொருட் பிழை
சுரப் பிழை சுருதிப்
பிழை - போன்ற எல்லாப் பிழைகளையும
மன்னிச்சு
மறந்து - எங்கிட வில்லுப்பாட்டைக் -
கேட்டு
மனசார வாழ்த்தி
- நெஞ்சாரப் புகழ்ந்து - நல்லாசி கூறி
நிறைவோட
போக வேணுமெண்டு - வினயமா கேட்டுக்
கொள்ளிறம் .
எல்.- ஆமா
கேட்டுக்கொள்றம்..
க.சொ. - சரி தொடங்குவமா ..?
ஆ01 .
அக்கா, ஒரு சந்தேகம்...
க.சொ. - கதையே இன்னும் துவங்கேல்லை..அதுக்குள்ள சந்தேகமா..?
ஆ01, நாங்கள்
பாடப்போறது வில்லுப்பாட்டா இல்லை
லொள்ளுப்
. பாட்டா ?
க.சொ. கேக்கிறவன் கேனையனா இருந்தா அது
லொள்ளுப்பாட்டு
இல்லையெண்டா அது வில்லுப்பாட்டு..
ஆ02. -
ஓகே..ஓகே..thank you proceed ..
க.சொ. முன்னொரு காலத்தில..
எல். - ஆமா..
க.சொ. - பரமார்த்த குரு...பரமார்த்த
குரு எண்டு ஒரு குருவானவர் .
இருந்தேர்…
ஆ01.-
குருவானவர் எண்டால் father
ரா ..
க.சொ.- father இல்லை bro ..குரு எண்டால் ஆசான்..
ஆ03.-
ஆசான் எண்டால் ?
க.சொ.- ஆசிரியர்...
ஆ04.-
ஆசிரியர் means ..?
க.சொ.- வாத்தியார்...
ஆ01.-
ஆ..எங்கிட MGR ..அப்பிடி விளக்கமாச் சொல்லுங்கோவன்..
க.சொ.- சரி..அப்பிடியே வச்சுக் கொள்ளுவம்..எங்கிட வாத்தியாருக்கு
அஞ்சு சீடப் பிள்ளைகள்
..
ஆ02.-
you mean
disciples ...
க,சொ.- ஓமடா..என்ர அறிவுக் கொழுந்து ....அதுகள்
அஞ்சும் மண்டையில
கொஞ்சமும் மசாலா இல்லாத மக்குச் சாம்பிராணியள் ..
ஆ05.-
their good names
please ...
(மானே
மரிக்கொழுந்தே மெட்டு) ) க.சொ.- மட்டி மடையனுடன் மி
லேச்சன் மூடன் பேதையெண்டு
அஞ்சு முட்டாப் பசங்களுக்கு வந்து வாச்சார் குருவா பரமார்த்தரு
இப்பிடியான குருவும் சீடப்பிள்ளயளுமா ஒருநாள்
பிரயாணம ஒண்டு வெளிக்கிட்டிச்சினம்..
ஆ03.-
எதில...train லையா..
க.சொ.-ம்ஹூம் ஆ.-01; அப்ப bus லையா ..
க.சொ.- NO ..NO ..
ஆ02.-
I know I know ...car றில தானே...
க,சொ.- நஹி ..அந்தக் காலத்தில .. எல்,- ஆமா
க.சொ.- காரில்லை.. எல்.- ஆமா
க.சொ.- பஸ்சில்லை.. எல்.- ஆமா
க.சொ.- ட்ரெயினும் இல்லை..
எல்.-
ஆமா
ஆ 01.-
பிளேனும் இல்லை ..என்னக்கா க.சொ. என்ர அறிவுக்கொழுந்து ..காரில்லை பஸ்சில்லை ரெயினில்லைப் பிளேனும் இல்லை...கடைசியில கால்நடை தான் தம்பிமாருக்கு..
எல்.- அய்யோ பாவம்..
க,சொ.-
பாவமில்லை..புண்ணியம்...
ஆ01.- புண்ணியமோ...?
க.சொ.- பின்ன...நடந்து பழகணும் ..காலையில் பல் தேய்த்தவுடன்
கண்டிப்பாக நாலு மயில்
நடந்து பழகணும்
எல்.- ஆமா நடந்து பழகணும்..
ஆ02.- ஆரை அக்கா சொல்றீங்கள் ?
க.சொ.- (நாட்டுக்கு சேவை செய்ய -மெட்டு)
கார் ஓட்டி வேலை பாக்கும் - நாகரீக நங்கையராம் அம்மாமாரும்
மாடிவீட்டு மச்சானோட -
நம்மமுதலாளிமாருகளாம்அய்யாமாரும்
சிரிக்கவைத்துவீட்டைச்சிறக்கவைக்கும்சின்னத்தம்பிதங்கையோட
குட்டி நாயும்..
ஆ04.-
நடக்காட்டில்..?
க.சொ.- கொழுப்பு முட்டிப் போகும்- கொலஸ் ற்றோல் நோயும் வந்துசேரும்
வாதமெட்டிப் பாக்கும் -
கால்கை பாதம் வீங்கி நோகும்
எல்.- அய்யோ கொழுப்பு முட்டிப் போகும் கொலஸ் ற்றோல் நோயும்
வந்துசேரும் ஆ01.- சரியக்கா நடக்கிறது அதுபாட்டுக்கு நடக்கட்டும்,
எங்கிட நடைபயணக்
காறரின்ர கதை என்னாச்சுது..
க.சொ.- கதை எண்டால் கூத்தும்
பாட்டும் சொல்லவா வேணும்..
(அக்காளுக்கு வளைகாப்பு –மெட்டு)
எல் ஆறுமலை தாண்டிப் போறோம் - ஆறுமுகனைப் பாக்கப் போறோம்
பொங்கல் வடை சாப்பாடு-
துள்ளிக் கூத்தாடித் தாளம் போடு
போடு தன்னானே தனனானே
-தான தன்னானே தையத்தானே
ஆ04.-- அக்கா...பசிக்குமாப் போல ..
க.சொ.- இருக்குதோ...தின்னிப்
பண்டாரம்...பொறு கதை முடியட்டும்
இப்பிடியாகத்தானே..
எல்.- ஆமா..
க.சொ. ஆடிப்பாடி ஆனந்தமா பயணம்
போனவயி ட வழியில
ஆறு ஒண்டு குறுக்க
வந்திட்டுது..
ஆ01 சனியன்...
ஆ02.- river றில தண்ணி இருந்துதோ ..?
க.சொ.- இல்லாமல்..(பாடுதல்)
ஆத்தில தண்ணி வர-அதிலொருவன்
மீன்பிடிக்க
-காத்திருந்த கொக்கு அதை-
கவ்விக் கொண்டு
போவதுமேன் பொன்னம்மா
அதைப் பார்த்து அவன்
தவிப்பதுமேன் சொல்லம்மா
ஆ01.-
இப்ப ஏனக்கா இந்தப் பாட்டை..?
க.சொ.- ஆறெண்ட உடன ஞாபகம்
வந்துது..எடுத்து விட்டிட்டன் பழையபாட்டு ..நல்லாயில்லையே ,
ஆ01.-
நல்லாத்தான் அக்கா இருக்குது ஆனால் கதை பாதி .. வழியிலஎல்லே
நிக்குது
க.சொ.- சரி, கதைக்கு வருவம்..அதாகப்பட்டது
எல்.- ஆமா..
க.சொ.- ஆறெண்டால் எங்கிட சாமிக்குச் சரியான பயம்..
ஆ05.- எனக்கும்தான்..
க.சொ.- பயந்த சாமி, வழியால வந்த ஒரு ஆசாமியிட்ட, ஆறு
என்னமாதிரி ஆழமோ அகலமோ
நீளமோ நரகலோ
எண்டமாதிரி விபரத்தைக் கேட்டேர்..வந்தவன் ஒரு
அண்டப்புளுகன்..விட்டான்
வண்டிலை..
க.சொ.- அபாய அறிவிப்பு அய்யா
அபாய அறிவிப்பு- வாத்தியார் அய்யா
நான் மெய்யாகச்
சொல்லுவதைப் பொய்யாக எண்ணாதே
அபாய அறிவிப்பு-அய்யா
அபாய அறிவிப்பு
ஆழம் தெரியாமக் காலை
விட்டா அது ஆளை முழுங்கி
விடும்
புரிஞ்சுக்குங்க
சாமம்
கழிஞ்சுதெண்டா கண்மூடித் தூங்கிவிடும்
சொல்லாமக் கொள்ளாம
பறிஞ்சிடிங்க
அபாய அறிவிப்பு அய்யா
அபாய அறிவிப்பு
ஆ01.- இது நல்ல கதைதான் ..எங்கயாவது ஆறு நித்தகொள்ளுமே ..?
க.சொ.- அதுசரி..அந்த மனிசனுக்கு அந்த அறிவு இருந்தால்தானே ..
மனிசன் சொல்லிச்சுது ''இப்ப ஆறு முழிச்சிருக்குதாம் வடிவாக் கவனிச்சுக் கொள்ளுங்கோ ..அது நித்திரை கொண்டாப் பிறகு சாமத்தில வெளிக்கிட்டுப் போகலாம்.. அது வரைக்கும் எல்லாரும் கப்சிப் எண்டு வாயை மூடிக் கொண்டு இருக்க வேணும் விளங்குதோ'' ஆ03.- நாங்கள் பள்ளிக்கூடத்தில இருக்குமாப் போல..என்னக்கா..
க.சொ.- கொஞ்ச நேரம் உங்களைச்
சும்மா இருக்கச் சொன்னால்
இருப்பியளே...கஷ்டம்..என்ன?
ஆ02.-
நஷ்டம்....சும்மா இருந்தால் சோத்துக்கு நஷ்டம் அக்கா
க.சொ.- ஓ..மடையனுக்குச் சும்மா
இருக்க ஏலேல்லை .. ''ஆறு sleepover க்குப் போய்ட்டுதா
எண்டு நான் பாத்திட்ட வரப் போறன்'' எண்டு சொல்லிக் கொண்டு எழும்பினான் . அவன்ட கூட்டாளிமட்டி சொன்னான் (பாடுதல்)
வேணாம்
மச்சான் வேணாம் இது பொல்லாத ஆறு
கண்ணு மூடித்
திறக்கு முன்னே
நம்ம விழுங்கும் டேஞ்சரு -முந்தி
ஆச்சி சொன்ன
கதையும் இப்ப ஞாபகம் வருது
மெய்யா அதை
நினைக்கக் கண்ணைக் கட்டுது
வயிறும்
கலங்குது ஆ03-- இந்தப் பாட்டு எனக்குத் தெரியும் அக்கா க.சொ.-. இப்ப உம்மிட்ட நான் அதைக்
கேட்டனானோ ? ஆ01- மட்டி சொன்னதை மடையன் கேட்டவனோ அக்கா..
க.சொ.- கேக்கிற சென்மமே அது?..கெடிறன் பந்தயம் புடி எண்ட மாதிரி துள்ளிப்
பாய்ஞ்சு எழும்பினார், கையில ஒரு கொள்ளிக்கட்டையோட
ஆ04.-
கொள்ளிக் கட்டையா ...அது எதுக்கு?
க.சொ.- ஆறு முழிப்போ நித்திரையோ எண்டு 'செக்'பண்ணத்தான்
ஆ01.-
அட மடச் சாம்பிராணி..
க.சொ.-
பெரிய சண்டியன் போல விறுக்கு விறுக்கெண்டு போனவனுக்கு கிறுக்கு கிறுக்கெண்டு மனசுக்குள்ள
ஒரே பயம்..கிட்டப் போகாமல தூரமா எட்டி நிண்டுகொண்டு .மெல்லமா..மெல்லமா..மெல்லமா கொள்ளிக் கட்டையத் தண்ணீருக்க விட்டேரோ....புஸ் எண்டு பாம்பு சீறினாப்போல ஒரு
சத்தம்....அவ்வளவுதான் குலைப்பன் காய்ச்சல் வந்தவன் மாதிரி நடு நடெண்டு நடுங்கி, ..தலை தப்ப னது தம்பிரான் புண்ணியமடா' எண்டு தம்பி எடுத்தேராம் ஓட்டம்.
ஆ01--
ஆத்தில புஸ் எண்டு சத்தம் எப்பிடியக்கா வந்தது..?
க.சொ.-- இது தெரியேல்லியா ...
ஆ03--
I know I know
....ஆறு fart பண்ணின சத்தம் தான் அது...என்னக்கா..
க.சொ.-- என்ர அறிவுக் கொழுந்து ...
ஆ02--
அதந்த கொள்ளிக் கட்டையில இருந்து தானே
வந்தது சரிதானேயக்கா ..
க.சொ.-- அதாகப்பட்டது ..
எல்-- ஆமா..
க.சொ.-- ஆத்தங்கரையில..ஆரோ அலுகோசுகள்..றால மீனைப்
பிடிச்சு.. சுட்டுக்கிட்டு திண்டு போட்டு
..விட்டுப்போட்டுப் போன ..எச்ச சொச்ச , கொள்ளிக் கட்டை அது..இன்னும் நூந்து
முடியாத குறைக் கொள்ளியத் தண்ணீக்கை தாட்டால்
என்ன வரும்..?
எல்-- சத்தம் வரும்..புஸ்
எண்டு..
க.சொ.--(நந்த வனத்தில் ஓர் ஆண்டி வில்லுப்பாட்டு--2- மெட்டு)
புஸ் எண்டு
ஆறுமே சீற -தம்பி தலை காலும் தெரியாமல்
தடுமாறி ஓட-/
கண்டதில்லை இது போல
அய்யோ பொல்லாத ஆறிது-
போனால் கை மோசம்
போகாதீர் போகாதீர்
நம்பி
இந்தக் குணங் கெட்ட
ஆற்றில் கால் வச்சால் நீர் காலி..
சொன்னவன் உண்மையில்
ஞானி -ஐயோ
ஆத்தாடி அம்மாடி
-அருந்தப்பு நானே
போகாதீர் போகாதீர் நம்பி..
( உரை)
மடயன்ர statement ரக் கேட்டு- மலாரடிச்சுப் போச்சினம்
எல்லாரும்..
ஆ05--
எல்லாரும் எண்டால்...including பரமார்த்தர் க.சொ.-- அவர்தானே
No 1 பயந்தாங் கொள்ளி..
ஆ04--
சரி எல்லாரும் பயந்து போச்சினம்...பிறகென்ன ஆச்சு ..?
க.சொ.-- அதாகப்பட்டது...
எல்.- ஆமா
க.சொ.-- தலை தப்பினது..
எல்.-- தம்பிரான் புண்ணியம்
க.சொ.- -எண்டு மனம் ஆறித் தேறி.. 'கொஞ்ச நேரம் நாங்கள் ஆறியிருப்பம் ..
அதுக்குள்ள ஆறும் கண்ணயர்ந்திடும் ..பிறகு
நசுக்கிடாமல் நடையக்
கட்டலாம்..' எண்டு திட்டத்தை மாத்தி விட்டத்தைப் பாத்துக்
கொண்டு..
உருண்டு பிரண்டு
சுறுண்டு படுத்துப் பாத்தினம்..ம்ஹும்
..பயந்து
போன சீவன்களுக்கு
நித்திரை வருமோ..?
எல்.-- வராது.. வராது..
ஆ05.-
செத்தாலும் வராது..
க.சொ.-- செத்தாப் பிறகு வந்தால் என்ன வராமல் விட்டால் தான் என்ன?
ஆ04.-
எனக்கு வருகுதக்கா..(ஒண்டுக்கு)
க.சொ.- -வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் போகத்தெரியவேணும்..
சபை சந்தீல நடந்து
கொள்ற நடைமுறை -இடக்கரடக்கல் தெரியாதே..
ஆ.03.--
அவவுக்கு இடக்கல் மடக்கல் தெரியும்..
அடக்கத் தெரியாதக்கா..
க.சொ.-- அதாகப்பட்டது..
எல்.-- ஆமா
க,சொ.- -பயந்தவனுக்குப் பாயுமில்லை படுக்கயில்லை ..
ஆ03.--
வீடுமில்லை நாடுமில்லை...என்னக்கா..?
க.சொ.-- என்ர அறிவுக் கொழுந்து...(பாடுதல்-டாடி மம்மி வீட்டில் மெட்டு )
பாயுமில்லை படுக்கை இல்லை பயந்தாலே நாடும் இல்லை
தடுமாறித் தளர வேண்டாம் இப்போது
துணிந்தவன் வாழ்வில்
என்றும் -தோல்விக்கு இடமேயில்லை
தூங்காது காத்திருப்பீர் கலங்காதீர்..
ஆ01--
பரமார்த்தர் இப்பிடிப் பாடினவரோ...?
ஆ02--
ஏன் உம்மிட விஜய்க்குத் தான் இப்பிடிப் பாடத் தெரியுமாமோ ..?
ஆ01--
இல்லை..அவர் ஒரு சரியான பயந்த மனிசன்..அதுதான்..
க.சொ.-- சந்தேகமாக் கிடக்கோ ..ஆளுக்கு
உள்ளுக்க சரியான பயம்தான் ஆனால்
வெளீல அதைக்
காட்டிக் கொள்ள மாட்டேர்..
ஆ03.--
ஓமக்கா சில ஆக்கள் அப்பிடித்தான்..
க.சொ. என்ர அறிவுக்
கொழுந்து..அப்பிடியாகத்தானே..
எல்.-- ஆமா
க.சொ.-- கொஞ்சம் கொஞ்சமாப் பொழுதும் விடிஞ்சுது....காலமை விடிஞ்ச
கையோட நீங்களிப்ப
என்ன செய்யிறனியள்..?.
எல்.: (பாடுதல்) காலை
எழுந்தவுடன் face book ..பின்பு
கலந்து கதை
பேச ஒரு skype ப்பு
மாலை
முழுதும் net
ரில் chatting என்று
வழக்கப்
படுத்திக் கொண்டு விட்டோம்
ஆ03.-
விடிஞ்ச கையோட கதை முடிஞ்சுதே அக்கா..
க.சொ.- முடியிறதுக்கு இதென்ன உம்மிட கொம்மாட சீலைத் தலைப்பே..
ஆ01.-
-நீங்கள் பிடியுங்கோ அக்கா கதைய -விட்ட
இடத்தில..
க.சொ.- எங்க விட்டனான் ?
ஆ04.--
கொம்மட சீலைத் தலைப்பில..
ஆ02.--
விடிஞ்ச கையோட அக்கா..
க.சொ.--ஆ..அதாகப்பட்டது....ஒருமாதிரி விடிஞ்சிட்டுதா ..சாமி இந்த முறை
மிலேச்சனை select பண்ணினேர்..
ஆ05.-
-எதுக்கு?
க.சொ.--செக் பண்ணத்தான்..
ஆ01.--
செக் பண்ணவோ..விடிஞ்ச மாதிரித்தான்.. க.சொ.
-மிலேச்சன் கொள்ளிகட்டயத்
தூக்கினான்...எந்தக் கொள்ளிக் கட்டைய ?
ஆ02.- நூர்ந்த கொள்ளிக் கட்டைய..
க. சொ.- கொண்டோடிப்போய் ஓட்டினான் தண்ணீருக்க....ரிசல்ட் என்னவா
இருக்கும்..?
ஆ04.-- புஸ்ஸாப் போயிருக்கும்..
ஆ01,-- புஸ் எண்டிராது..கட்டைதான் நூந்து போச்சுதே...
க.சொ.--சக்சஸ் ..(பாடுதல்) வெற்றி வெற்றி என்று சொல்லி
விரைந்து கூவினான்
-வேகமாக வாங்க -நாங்கள் போகலாம் என்றான்
(உரை)' ஒருத்தரும் மூச்சுக் காட்டப்படாது..ஒரு சத்தமும்
வரப் படாது
வாயை மூடிக்கொண்டு 'கம்'மெண்டு வரவேணும்' பெரியவர் order
போட்டால் ஆரும்
மறுத்தான் குடுப்பினமே..ஒருத்தருக்குப் பின்னால
ஒருத்தரா அம்மாட சீலைத்
தலைப்பைப் பிடிச்சுக் கொண்டு போற
சின்னப் பிள்ளையளப் போல, வாலைச் சுருட்டிக் கொண்டு -மெல்ல
மெல்லமாக் காலை எடுத்து
வச்சு, பக்குவமா-பதவிசாப் பதுங்கிப்
பதுங்கி-
ஒருமாதிரியா அண்டலிப்பாங்கள் ஆறு பேரும் மறு
கரையில போய் land பண்ணிச்சினம்..
ஆ02.-- பாவம் ..நல்லா நனைஞ்சு தோஞ்சு
போயிருப்பினம்...
க.சொ.--தோயிறதோ..முழங்கால் வரை தன்னும் எட்டாத தண்ணி வத்திப்
போன ஆத்தை மூச்சைப் பிடிச்சுக் கொண்டு கடந்த
வீரவான்கள் எல்லே அவயளிட
புளுகுக்குக் கேக்க வேணுமே..
எல்.-- (மாறுகோ மாறுகோ மெட்டு) ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் இந்நாளிலே வெற்றியே
--- பெற்று நாம் -- வீரர்கள் _ ஆனமே மாலைகள் சூடுவோம்- மங்கலம் பாடுவோம்
க.சொ.-- ஆத்தை ஏமாத்திப் போட்டமெண்டு
ஆனந்தப் பட்டாலும்
சாமியாருக்கு
மனசுக்குள்ள ஒரு சந்தேகம்..
ஆ03.--
எனக்கும் ஒரு சந்தேகம் அக்கா
க.சொ.-
-'சந்தேகம் தீராத வியாதி- அது வந்தாலே தடுமாறும்
அறிவென்னும்
ஜோதி', எண்டு பாடியிருக்கிறேர்- கவிஞர் மருதகாசி - நீர் கனக்க
யோசியாதையும்..கேளும்..என்னசந்தேகம்?
ஆ03.---
அது வந்தக்கா, அந்தச் சாமியார் உங்களுக்குச் சொந்தமோ..?
க.சொ.-- அதாகப்பட்டது..
எல்.- ஆமா..
க.சொ.-- சாமியாருக்கு கணக்குச் சரியா
வராது..கணக்கில ஆள் வீக்..
ஆ01.--
நான் month அக்கா...அவர் வீக் நான் month ..
க.சொ.-- இப்ப உம்மை ஆரும் கேட்டதே..
ஆ01.--
sorry அக்கா..
க.சொ.-- சொறியாமல் கதையைக்
கேளும்..அதாகப் பட்டது..
எல்.-- ஆமா...
க.சொ.--சாமியாருக்கு சந்தேகம் தொட்டிட்டுது..பயணம் வெளிக்கிட்டது
ஆறு
பேர்..ஆத்தைக் கடந்தது ஆறு பேர்..இப்ப அந்த ஆறுபேரும்
ஒழுங்கா இருக்கிறமோ ..எண்டு அய்மிச்சமாப்
போட்டுது..
ஆ04.---
எண்ணிப் பாக்க வேண்டியது தானே ..?
க.சொ.-- எண்ணினேர் எண்ணினேர்....எத்தினை முறை எண்ணினாலும்
அஞ்சுதான் வந்துது
..ஆறு வரேல்லை..
ஆ02.--
சாமிக்கு மாறுகண்ணோ ..
க.சொ.- தன்னை விட்டிட்டு எண்ணினால் எப்பிடிவரும்..ஆறைக் காணம்
ஆறைக் காணம் ..ஆறைக்
காணம் ..எண்டு மனிசன் அழுது
புலம்புது..பக்கத்தில
ஆறு அதுபாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்குது..
'பாவம் மனிசனுக்கு மறை கழண்டிட்டுதாக்கும் எண்டு வழியால
வந்தவை போனவை எல்லாம்
பாத்துப் பரிதாபப் பட்டினம்..
பாடுதல்- (வித்தாரக் கள்ளியெல்லாம் -மெட்டு)
அறியாமல் காலை
விட்டோம் -அந்தரித்து நிக்கிறமே - அய்யோ
சொன்னானே சோதிடனும்
- காவு கொள்ளும் கவனமெண்டு
கேளாமல் போனோமே
-கேடு கெட்ட ஆறு இவள் -போடி
ஆறில் ஒன்றைக் கூறு
போட்டு- கொன்றுமே நீ தின்று விட்டாய்- அடி
நம்பியுன்னை
வந்தவனை -நாசம் நீயும் செய்யலாமோ -அய்யோ
நல்ல கதி
இல்லையடி- நாசமாத்தான் போவாயே நீ.
க.சொ.--இப்படியாகத்தானே
எல்.-- ஆமா ..
க.சொ.--விழுந்து பிரண்டு..அழுது புலம்பி ..இவயள் ஆரவாரப் படுறதை,
அந்த வழியா வந்த விறுமத்
தடியன் ஒருத்தன் கண்டிட்டான் ...
அவன் ஆள் ஒரு
எம்டன்....ஆறும் அரை லூசுகள் எண்டு டக்கெண்டு
கண்டுபிடிச்சிட்டான்..
ஆ03.-- அதெப்பிடியக்கா
டக்கெண்டு கண்டுபிடிச்சவர்..?
க.சொ.--மூளையிருந்தால்
கண்டுபிடிக்கலாம் தானே..
ஆ03.-- நான் கண்டு பிடிச்சிட்டன்..நான் கண்டு பிடிச்சிட்டன் ..
க.சொ.--என்னத்தை...
ஆ03.-- வந்தவர் இறைச்சி
கடைக்காரர்...அவரிட்டத்தானேயக்கா மூளை
இருக்கும்..
க.சொ.--சங்கதி விளங்காததுகளைச் சேத்துப் புடிச்சது..என்ர பிழைதான்
ஆ03-- அப்பிடி ஆரக்கா சொன்னது ..இறைச்சக் கடைக்காரரோ ..பரமார்த்தரோ?
க.சொ.--அதாகப்பட்டது எல்.-- ஆமா
க.சொ.--சங்கதி விளங்காத அரை
வேக்காடுகளோட ..கொஞ்சம் விளையாடிப்
பாக்கலாமெண்டு..
ஆ01.-- வந்தவர் நினச்சேர்..
க.சொ.--நீர் வந்து இதில குந்துமன்...
ஆ01.-- sorry
அக்கா
க.சொ.--கதை கேக்கிறதெண்டால் சும்மா
சொறியாமல்.கேளும்..
ஆ01.-- சரியக்கா..
க.சொ--அதாகப்பட்டது.. எல்.--ஆமா..
க.சொ.= வந்தவன்ர மனசில படம் ஒண்டு . ஓடிச்சுது..
ஆ04.-- என்ன படமாக்கா ..அஜித்திடையோ விஜயிடையோ..
ஆ05.-- புலியோ வேதாளமோ..
க.சொ.= (பாடல்-நந்தவனத்தில் ஓர் ஆண்டி -மெட்டு)
நரிமுக தரிசனம்
இன்றே-
நான் கண்டது
போல் நன்நாளிது தானே
ஆளுக்குப்
பத்து பத்தாக
ஆஹா அறுபது பவுண்
தேறும் - அது போதும் நன்றே..
( உரை)
ஆளுக்குப் பத்துப் பவுண் கணக்கில சுளையா 60 பவுண்
கறந்திடலாம்...எண்டு
மனசில கணக்குப் போட்டிட்டான்..
ஆ02.-- பாழ்படுவான் ..
க.சொ.= கணக்கில அவன் புலி..
ஆ03.-- புலிக்குக் கணக்குத் தெரியுமோ அக்கா
க.சொ.= எனக்குத் தெரியாது..
ஆ03.-- உங்களுக்குக் கணக்குத் தெரியாதே...அக்கா ..oh it 's a pity க.சொ.= நீர் இங்கிலிசில பரிதாபப் பட்டது காணும்
..கதையைக் கவனியும்வந்த
விறுக்கன் கையில ஒரு பிரம்பு வச்சிருந்தான் . பென்னாம் பெரிய
மொத்தப் பிரம்பு.(பாடுதல்)
மந்திரக்கோலிது
அய்யா
இது
தந்திடும் போனவன் உசிரையும் மெய்யா
நன்கிது
தேர்ந்திட வேண்டும்-
நான்
சொல்வது போல நீர் செய்திடல் நன்றாம்
போடுவேன்
ஓரடி பின்னால்
அதைப்
பொறுத்தாலே -போனவன் சேருவான் முன்னால்
ஒன்றுக்குப் பின்னாடி ரெண்டு
அந்த
எண்களைப் பேரோடு பறையணும் கண்டு
ஆ02.-- ஆளென்ன மலையாளமோ..?
க.சொ.=நான் ஒரு மந்திரவாதி....இந்த மந்திரக்கோலால நான் ஒரு அடி
அடிச்சன்
எண்டால் ..
ஆ03.-- ஓராயிரம் அடி அடிச்ச மாதிரி...எண்டு சொன்னவனோ..
க.சொ.=இப்ப ஏன் நீர் குறுக்க பாயிறீர்..
ஆ03.-- ஒரு flow வில வந்திட்டுதக்கா
க.சொ.= ஒரு flow வும் தேவையில்லை ..கதையைக் குழப்பாமல் follow
பண்ணுங்கோ பாப்பம்..
ஆ03.-- ஓகே.....சரியக்கா
க.சொ.= அதாகப்பட்டது. அந்த விறுமத் தடியன் சொன்னான் நில்லுங்கோ எல்லாரும்
வரிசையில..நான் அடி ஒண்டு போடுவன் பின்னால.. அடிவிழுந்த கையோட, நம்பரையும் பேரையும்
கடகடெண்டுசொல்ல வேணும்..
ஆ01.--PE மாஸ்டரா இருந்த ஆளோ
..கையில பிரம்பும் வேற வச்சிருக்கிறான்..
க.சொ.= எல்லாருக்கும் ஒண்டு ரெண்டு தெரியுமோ....எங்க எண்ணுங்க பாப்பம்
(பாடுதல்)ஒண்டு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஆறு
ஆறு கொண்டு
போனவனும் அடுத்து வாறான் பாரு
One two three
four five six - six ஸு upon six ஸு
wonder ஒண்ணு நடக்கும் பார் மாண்டவனும் மீண்டு
ஏக் தோ தீன் ச்சார் பாஞ்ச் சே -ச்சார்ரு பாஞ்ச்
சே.
காஞ்ச மாடு போல பய பாஞ்சு வர்றான் பாரு...
ஆ02.-- UNO DOS
TRES QUATRE CINCO SEIS
க.சொ.=உமக்கென்ன நடந்ததிப்ப ...?
ஆ02.-- Spanish சில சொன்னனான் ஒண்டு ரெண்டு மூண்டை..
க.சொ.= இங்க நான் என்ன class ஸே நடத்திறன்.. அதாகப்பட்டது
எல்.-- ஆமா..
க.சொ.= அந்த வீணாப் போனவன், தான் ஒரு
மந்திரவாதி எண்டு அவங்களை
பேக்காட்டி
நம்பவச்சுப் போட்டான்.. (நந்தவனத்தில் ஓர் -மெட்டு)
மந்திரம் சொல்வது
போலே -
மாயன் வாயினுள்
ஏதேதோ முணுமுணு என்றான்
முதலடி
மூடனுக்காச்சு
அவன் முக்கியே
பேரோடு ஓராம் ஆள் என்றான்
மட்டி பின் மடையனும்
வந்தான்
வந்து வாய் கொன்ன வசமாயடி -வாங்கியுமே சென்றார்.
பேதைக்குப் பின்னால்
மி -லேச்சன்
பாவம் அடிதாங்க
மாட்டாமல் அழுது புரண்டான்
ஆறாவதாய் வந்தார்
சாமி
அவர்அய்யோநான்பரமார்த்தர்
ஆறாமாள்
என்றே..அலறியடித்துப்பின் தேறி
ஆஹா ஆறாமாள்
வந்திட்டான் என்று மகிழ்ந்தார்
(உரை) மனிசனுக்குத் தலைகால் புரியாத சந்தோசம்
ஆ01.-- இருக்காதா பின்ன ...ஆறாமாள் வந்திட்டானெல்லே..
க.சொ. வந்திட்டானோ...போனால் எல்லே வாறதுக்கு..
ஆ01-- அப்ப ஆறு விழுங்கீட்டுதெண்டு அழுதிச்சினமே ..?
க.சொ.=என்ர அறிவுக்கொழுந்து...
ஆ04.-- அக்கா கதை..
க.சொ.
அது ஒருமாதிரி ஆத்துக்கு இங்கால .வந்திட்டுது..மனிசனுக்கு
புளுகம் எண்டால்
புழுகம் அப்பிடி ஒரு புளுகம் கட்டையில போறவனைக்
கட்டிப் புடிச்சுக்
கொஞ்சாத குறை ..(Googlegoole
பண்ணி பார்த்தேன்)
சூதும் வாதும்
சேர்ந்த இந்த உலகத்தில
உம்மைப் போல ஒரு
மனிசனும் பொறந்ததில்லை
வேஷம் போட்டு மோசம்
செய்யும் உலகத்தில
உம்மைப் போல ஒரு
உத்தமனும் பொறந்ததில்லை
நாம் கத்தியழக்
கண்டுமனம் நொந்து போனீரே
எம் புத்தி தடுமாறு
முன்னே மாயம் செய்தீரே
முன் செத்துப்போன
சீவனைத்தான் மீட்டுத் தந்தீரே
இப்பாரிலே இப்படி
யாருளர் கூறுவீர்
நித்தம் நித்தம்
எண்ணி -நாளும் சொல்வோம் நன்றி
( உரை) கதை கதையா இருந்தாலும் காரியத்தில கண்ணாயிருக்கிறவன்
தான் விண்ணன்.
வந்தவன் பேய்க்காய்....பெரியவரின்ர பருப்பு
அவனிட்ட வேகேல்லை
...அவரின்ர ஐஸுக்கு அவன் உருகேல்லை..
அறுவதுக்கு
எழுவதாக் காசைக் கறந்திட்டுத்தான் இடத்தை
விட்டுக்
கழண்டான்..
ஆ01.-- நடைபயணம் வெளிக்கிட்டது நட்டக்கணக்கில கொண்டுபோய்
விட்டிட்டுது
..என்னக்கா..
க.சொ.= எல்லாத்திலயும் லாப நட்டம்
பாக்கக்கூடாது..அவயள் ஆக்களும் அந்த
மன நிலமையில அப்ப இல்லை.. சந்தோசமா இருக்கிறவைய ஏன்
குழப்புவான் ..(he is a jolly good fellow - மெட்டு )
மந்திரத்தினாலே
மாண்டவனும் மீண்டான்
மாண்டவனும் மீண்டான்-
மறுபடியுமே
மாண்டவன்தானே ..பின்
மீண்டு வந்தானே
கண்டுகொண்டோம் நாமே -கற்றறியாப்
பாடம்
காணும்
ஆறுகுளமதில் காலை விடாதீர்.
காலை விடாதீர்-பின்
கவலைப்படாதீர்
புத்தி இருந்தாலே
-சித்தி பெறலாமே
சித்தி பெற வேண்டில்
-புத்தியைத் தீட்டு .
புத்தியைத் தீட்டி
-இப்புவன மீதிலே
வாழ்க என்றும்
வாழ்க -வளமுடனே வாழ்க.
வீடு ஏகவேநாம் விடைபெறுவோமே.
வாழியவே பல்லாண்டுகாலம் -வளர்தமிழ்
செம்மொழி வாழியவே
நோதம்ப்ரனாம் பதியிலுறை -நல்ல தமிழ்க் கல்விக்கூடம் வாழியவே
அதிபரோடு ஆசிரிய
-மாணவச் செல்வங்களும் வாழியவே
வந்திருந்து வில்லிசை கேட்ட - அன்பர்களும் நண்பர்களும்
வாழியவே
வாழிய வாழிய வாழிய
வாழிய -வாழிய வாழியவே (2)
சுபமங்களம்
No comments:
Post a Comment